மன்னார் நகரசபை அமர்வு: பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி - 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு
மன்னார் நகரசபையின் 4ஆவது அமர்வு நேற்றையதினம் (25) காலை 10 மணியளவில் நகரசபை சபா மண்டபத்தில் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூன்று உறுப்பினர்கள் அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சபை அமர்வு இறை வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிலையில் தவிசாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுமுறை அறிவித்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டறிக்கை சமர்ப்பிப்பு
தொடர்ந்து கடந்த கூட்டறிக்கை ஏற்கனவே சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விசேட கூட்டறிக்கை மற்றும் சாதாரண கூட்டறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குறித்த அறிக்கையில் பல்வேறு பிழைகள் காணப்படுவதாகவும், அதை சுட்டிக்காட்டி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் குறித்த அறிக்கை குறித்து ஆதரவாகவும், எதிராகவும் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது குறித்த அறிக்கை சரி என சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கை உயர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெளிநடப்பு
இந்த நிலையில் குறித்த அறிக்கை கூடிய உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து சபை அமர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது நகர சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் எழுந்து குறித்த சபை அமர்வில் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளமையினால் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையில் இருந்து வெளி நடப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து சபை அமர்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போது நகர சபை உறுப்பினர் பேனட் பிரசன்னா அதனை தொடர்ந்து நகர சபை உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன் ஆகியோர் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதை தொடர்ந்து சபையில் எவ்வித குழப்பங்களும் இன்றி நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அமர்வு இடம்பெற்றதோடு ஏனைய உறுப்பினர்கள் தமது வட்டாரங்களில் உள்ள பிரச்சினைகள், முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த சபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றதுடன் ஏனைய விடயங்கள் ஆராயப்பட்டு கூட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






