அடுத்த வருடம் கல்விக்காக பெருந்தொகை பணம் ஒதுக்க யோசணை: சுரேன் ராகவன் உறுதி
2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனை கூறியுள்ளார்.
புதிய நியமனம்
அடுத்த வருட இறுதிக்குள், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
”இலங்கையில் முதன்முறையாக நுண்கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் உரிய இலக்குகளை அடைய எதிர்பார்க்கிறோம். இத்திட்டத்தின் ஊடாக கலைப் பட்டதை மேலும் வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.
21ஆவது நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டிலிருக்கும் நாம் உயர் கல்விக்கான தேசிய ஆணைக்குழு அல்லது அதிகாரசபையொன்றை உருவாக்கஎதிர்பார்க்கிறோம். அதனூடாக பல்வேறு பகுதிகளில் முடங்கிக்கிடக்கும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒரு இடத்திலிருந்து செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் பிரஜைகளை வலுவூட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பெறும் மாணவர்களுக்கு அரசாங்கம் முதலீடு செய்யும் முழுத் தொகையையும் நேரடியாக புலைமைப்பரிசில் அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் எந்தவொரு மாணவரும் தனக்கு விருப்பமான பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தெரிவுக்கமைய இந்நாட்டு அரச பல்கலைக்கழங்களுக்குள் தீர்மானமிக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.




