பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதர பணி உதவியாளர்கள் முழு விபரங்களை கோரிய நீதிமன்றம்
வடமாகாண சுகாதரபணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவானது நேற்றைய தினம்(31.07.2026) வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார பணி உதவியாளர்கள்
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதார பணியாளர்களுக்கு வடமாகாணத்தால் நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில் கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனத்தைப் பெற்ற 389 சுகாதார பணியாளர்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும், அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த சுற்றறிக்கையானது மீளவும் திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதார பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதார பணி உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை மன்று ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ் இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகியுள்ளனர்.
பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட முன்னிலையாகியுள்ளார். அத்துடன் வடமாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர் சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார்.
இதன்போதே, வடமாகாண சுகாதர பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் பலி - சிறைச்சாலைக்குள்ளிருந்து கேட்ட துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள்