மிகப் பாரிய 34 கப்பல்களை இரவோடு இரவாக கடத்திய ஈரான்.. ஹோர்முஸ் முற்றுகையில் ட்ரம்பிற்கு காத்திருந்த ஏமாற்றம்!
ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், ஈரானுடன் தொடர்புடைய 34 கப்பல்கள் அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 13 அன்று ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்கா விதித்த கடல்வழி முற்றுகையை (Blockade) மீறி இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடாப் பகுதியில் இருந்து 19 கப்பல்கள் வெளியேறியுள்ளன, அதே சமயம் 15 கப்பல்கள் அரபிக்கடல் வழியாக ஈரானுக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பாரியளவு எண்ணெய் பரிமாற்றம்..
இதன்போது, வெளியேறிய கப்பல்களில் 6 கப்பல்கள் சுமார் 10.7 மில்லியன் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு சென்றுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 910 மில்லியன் டொலர் (இலங்கை ரூபாயில் சுமார் 271 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அமெரிக்கப் படைகளிடமிருந்து தப்பிக்க ஈரான் கையாண்ட உத்திகள் அம்பலமாகியுள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
'டோரினா' (Dorena) போன்ற பாரிய ஈரானியக் கப்பல்கள், தங்களது இருப்பிடத்தைக் காட்டும் 'டிரான்ஸ்பாண்டர்' கருவிகளை அணைத்துவிட்டு இரவோடு இரவாகத் தப்பியுள்ளன.
மலேசியக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றி, அதன் பிறப்பிடத்தை மறைக்கும் (Ship-to-ship transfer) தந்திரத்தை ஈரான் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.