ஜூலை மாதம் 30 கோவிட் மரணங்கள் பதிவு : மருத்துவர் அன்வர் அம்தானி
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஜூலை மாதத்தில் மாத்திரம் 30 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கோவிட்-19 ஒருங்கிணைப்பாளரும் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் அன்வர் அம்தானி தெரிவித்துள்ளார்.
மரண பதிவுகள் அதிகரிப்பு- மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
கோவிட் மரண பதிவுகள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருப்பதால், மக்கள் சுகாதார சட்டங்களை பின்பற்றி பாதுகாப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டிய 50 வீதமான மக்கள் இன்னும் அதனை செலுத்திக்கொள்ளவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 10 லட்சம் மக்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.
முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களும் இருக்கின்றனர்
மேலும் சிலர் முதலாவது தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளவில்லை. முக்கியமான பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயம்.
காய்ச்சல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால், சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைய வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
பிள்ளைகளுக்கு கடும் தடிமன் மற்றும் காய்ச்சல் காணப்பட்டால், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மருத்துவர் அன்வர் அம்தானி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.