மதுபானம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
மட்டக்களப்பு - ஏறாவூரில் சட்டவிரோத மதுபான மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களைக் கைது செய்துள்ளதுடன், 43 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று(16) ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 21 கால் போத்தல் மதுபான போத்தல்களுடன் கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இன்னும் ஒரு வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரிடமிருந்து 22 கால் போத்தல் மதுபானங்களுடன் அவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3350 மில்லிகிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



