கடந்த 10 ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 27 ஆயிரம் பேர் பலி! - அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கு தேவையான சாதனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் இறந்துள்ளனர். “போரின் போது கூட, 29,000 பேர் மட்டுமே இறந்தனர். இதன்படி, இந்த பேரழிவைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குடிபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது பொலிஸார் குடிபோதையில் வாகனம் செலுத்திய 783 பேரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 534 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 180 முச்சக்கர வண்டி சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.