உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு!
மந்துவில் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மந்துவில் படுகொலையில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது.
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் தலைவர் த.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.யூட் பிரசாத் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















