இலங்கையில் நாள் ஒன்றுக்கு 25 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையிலான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு மணி நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேருவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ம் திகதி வரையிலான ஆறு மாதங்களில், அதாவது 180 நாட்களில் நாட்டில் 4743 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனை ஆராய்ந்த போது பல்வேறு விபரங்கள் வெளியாகியுள்ளன. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்கள் 21 சதவீதம் பேர் ஐந்து வயதிற்குட்பட்டவர்கள்.
17 சதவீத சிறுவர்கள் 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீத சிறுவர்கள் 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது 15 வயதிற்குட்பட்ட 75 சதவீத சிறுவர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர்.
180 நாட்கள் அல்லது ஆறு மாதங்களில் 4743 முறைகேடுகள் நடக்கும்போது, ஒரு நாளைக்கு 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சிறுவர்கள் அவர்களின் தந்தை, தாய்மார்கள், மதகுருமார்கள், தாத்தாக்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களால் கூட துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.