மன்னார் மாவட்டத்தில் 11 நாட்களில் 240 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்: வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மாலை மேலும் 50 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 240 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் புதிதாக 50 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 45 தொற்றாளர்கள் அன்டிஜன் பரிசோதனைகள் மூலமாகவும் 5 தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 தொற்றாளர்கள் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும், 8 தொற்றாளர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும், மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் அடம்பன் வைத்தியசாலைகளில் தலா 6 தொற்றாளர்களும், நானாட்டான் வைத்தியசாலையில் 5 தொற்றாளர்களும், வங்காலை வைத்தியசாலையில் 4 தொற்றாளர்களும், முருங்கன், பெரிய பண்டிவிரிச்சான், மற்றும் விடத்தல்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் தலா 2 தொற்றாளர்களும், தலைமன்னார் வைத்தியசாலையில் ஒரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 11 நாட்களில் 240 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாள் ஒன்றிற்கு மன்னாரில் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மொத்தம் 2618 கோவிட் தொற்றாளர்களும், தற்போது வரை 2635 கோவிட் தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மாதம் மேலும் 02 கோவிட் தொற்றாளர்கள் மரணித்துள்ளனர். இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கோவிட் தொற்றாளர் மரணங்கள் பதிவாகி உள்ளது.
கோவிட் மரண வீதமானது மன்னார் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுகின்றது. இதேவேளை கோவிட் தொற்று அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட ஆளணிகளுக்கு மேலாக இணைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.
மேலும் தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாகக் காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது. அத்தோடு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றில் நடத்திச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது. குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.
ஆகவே மக்கள் இவ்விடையத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை இல்லாது ஒழித்து நுளம்பு தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சதவீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
இதனைத் தவிர மொத்தமாக 5573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்குப் பாடசாலையிலிருந்து இடை விலகிய வருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
