கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 211 தொற்றாளர்கள் அடையாளம்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 211 கோவிட் - 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று காலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் 3ஆவது அலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளும், 230 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
ஆகக்கூடுதலாகக் கடந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 157 நோயாளிகளும், கல்முனையில் 29 பேரும், அம்பாறையில் 15 பேரும், திருகோணமலையில் 10 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை கூற முடியாது.
ஆகவே அரசாங்கத்தின் வழிகாட்டல்களை நாம் ஒவ்வொருவரும் சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இதற்கான தடுப்பு மருந்துகள் தொடர்ச்சியாக வழங்கப்பட இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் ஜூலை மாத முற்பகுதியிலிருந்து தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.