20வது திருத்தச்சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை! இராதாகிருஷ்ணன் எம்.பி (Video)
20வது திருத்தச் சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகை பொருட்கள் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கும், கிராமப்புற மக்களும் நுவரெலியா - இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வா புஷ்பநாதன், வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ் மாறன் ஜனார்த்தன், அ.ஹரிச்சந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
நல்லாட்சி அரசாங்கம் 19வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை.
அதற்குக் காரணம் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமையே என்று கூறி இந்த அரசாங்கம் 20வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதிக்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்தது. எல்லா பிரச்சினைகளையும் ஒருவரால் தீர்த்துவிட முடியும் என்று கூறியே இந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்குக் கொடுத்தது.
ஆனால் பிரச்சினைகள் தீர்ந்ததா?இல்லை, எல்லா பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.எனவே இந்த 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் எந்தவிதமான பயனும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த அதிகாரத்தின் மூலமாக ஜனாதிபதியால் எதனையும் சாதிக்க முடியவில்லை.
ஒரு விடயம் நடந்திருக்கின்றது, இந்த சட்டத்தின் மூலமாக ராஜபக்ச குடும்பத்திற்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பொழுது அன்று அனைவரும் நினைத்தார்கள் இனிமேல் இந்த நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நினைத்து அன்று 69 இலட்சம் மக்களும் வாக்களித்து இன்றைய ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவு செய்தார்கள்.
ஆனால் நாங்கள் மலையக மக்களுக்குக் கூறினோம். எங்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவிற்கு எங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.
அதன்படி 60 வீதமான எங்களுடைய மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள்.ஆனால் நாட்டில் ஏனைய பகுதியிலிருந்த மக்கள் செய்த தவறின் காரணமாக நாம் இன்று 40 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம்.
மீண்டும் எல்லா பொருட்களுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களே இந்த அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.நான் நினைக்கின்றேன் இன்று எதிர்க்கட்சியைவிட அரசாங்கத்தை அதிகம் விமர்சனம் செய்வது ஆளும் கட்சியின் அமைச்சர்களே.
இன்று அரசாங்கம் எந்த திட்டத்தை முன்வைத்தாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையைப் பொருட்களுக்கு விதித்தாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. இன்று உரத்தின் விலை ஒரு மூடை 9000 ஆயிரமாக இருக்கின்றது.
இந்த விலைக்கு உரத்தை வாங்கி விவசாயிகள் இலாபம் அடைய முடியுமா? இன்றைய மரக்கறிகளின் விலையை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே போல அரிசியின் விலையையும் மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்று இலங்கையிலிருந்து அநேகமானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கே முயற்சி செய்கின்றார்கள்.
அநேகமாக அனைவரும் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். இலங்கைக்கு ஆபத்தின் பொழுது உதவுவது இந்தியா என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.ஆனால் அதே நேரத்தில் சீனாவும் எங்களுக்கு உதவி செய்கின்றது. அதற்காக அவர்கள் எங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.
அது நடைமுறை ஏனென்றால் அவர்கள் கடன் கொடுக்கின்ற பொழுது எதனையாவது எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் யாரும் யாரையும் நம்பி கொடுக்கின்ற ஒரு நிலைமை தற்பொழுது இல்லை.
எனவே நாம் எமது பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக
எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலைமையிலேயே நாங்கள்
இருக்கின்றோம். எனவே நாங்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.




ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri