மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2000 கிலோகிராம் கோழி இறைச்சி எரித்து அழிப்பு
போதுமானளவு குளிர்பதன் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சி நேற்று எரித்து அழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்போது குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி வசதி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதனையடுத்து சுகாதார பரிசோதகர்களால் நேற்று மாலை எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா தெற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.