பொன்னாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2 வாள்கள் மீட்பு
வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் இரண்டு வாள்களுடன் ஒருவரை விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து குறித்த வீட்டைச் சுற்றிவளைத்தனர் .
இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரு வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வாள்களையும் கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் விசேட அதிரடிப்படை குறித்த நபரையும் இரண்டு வாள்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கைதானவரது உறவினர்கள் தெரிவிக்கையில், கைதானவர் காட்டுக்குச் செல்லும்போது குறித்த வாள்கள் இருப்பதை அவதானித்த நிலையில் அதனை எடுத்துவந்து வீட்டில் வைத்துவிட்டு சனசமுக நிலையத்திற்குத் தகவல் வழங்கினார்.
சனசமூக நிலையத்தினர் வேலைப்பழு காரணமாக அதனை எடுத்து பொலிஸாரிடம் கையளிக்க வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

