கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவினை சேர்ந்த 06பேரும், ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவருமாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இரண்டுமாக மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1426 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 19 கோவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மாதம் 165 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த வருடத்தில் 200 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.