16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள்.. கல்வி அமைச்சின் புதிய திட்டம்
16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்குவதற்காக புதிய விடுதி கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் கல்வி அமைச்சு மூலம் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் விடுதி புனரமைப்பு மற்றும் புதிய கட்டுமானங்களுக்காகக் கடன்கள் ஏதுமின்றி உள்நாட்டு நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
55 புதிய விடுதிகள்
அத்துடன், சவூதி அபிவிருத்தி நிதியுதவியின் கீழ் வயம்ப மற்றும் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட விடுதிகளுக்காக வெளிநாட்டு கடனுதவிகளும் ஒதுக்கிடப்பட்டுள்ளன.

வவுனியா, யாழ்ப்பாணம் (கிளிநொச்சி வளாகம்), தென்கிழக்கு, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் சபரகமுவ போன்ற தங்குமிடப் பற்றாக்குறை நிலவும், நகர்ப்புறமல்லாத பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளித்து 55 புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன.
மேலும், தனியார் விடுதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய கொள்கை ஒன்றைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரைவு செய்து வருகிறது.
இக்கொள்கை சுகாதாரம், பாதுகாப்பு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்வதோடு, பொது - தனியார் பங்களிப்புடன் நிலங்களை வழங்கி கூடுதல் விடுதிகளைக் கட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.