கிழக்கு பல்கலைக்கழகத்தின் பகிடிவதை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சிஜடியினரால் கைது செய்யப்பட்ட,மட்டக்களப்பு-வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவம் நேற்று புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு-வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளனர்.
பகிடிவதை
இந்நிலையில்,பகிடிவதையால் பாதிக்கப்பட்ட ஹிம்புட்டான அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, பகிடிவதை மேற்கொண்டதாகவும் ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும் 3ஆம் ஆண்டு மாணவர்குழுவுக்கு எதிராக 26.10.2024 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் குழு ஒன்று சம்பவதினமான நேற்று காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு 16 மாணவர்களையும் அழைத்து அங்கு வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
பின்னர் மாலை 4.45 மணிக்கு 1998 ஆம் ஆண்டு 20ஆம் எண் கல்வி நிறுவனங்களில் சோதனை மற்றும் பிற வகையான வன்முறைகள் (தடை) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதில் 9 மாணவன்கள், 7 மாணவிகள் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.




