முல்லைத்தீவிற்கு சுமார் 15000 இந்திய நிவாரண பொதிகள் ஒதுக்கீடு
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதோடு மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கை பால்மா பக்கட்டுக்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானித்துள்ளனர்.
இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 15857 நிவாரண பொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 3964 பால்மா பக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பணிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு பால்மா வழங்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டு வருமான செலவு கணக்கெடுப்பின் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கே இவை
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.