தாய்லாந்தில் தாத்தா - பாட்டி உட்பட 7 பேரின் உயிரை பறித்த 14 வயது சிறுவன்: சுவரேறிப் பாய்ந்து தப்பிய மாணவர்கள்
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் அமைந்துள்ள நொந்தபுரி பகுதியில் உள்ள டெப்சிரின் பாடசாலையில் 14 வயது மாணவன் ஒருவன் நடத்திய கொடூரத் துப்பாக்கிப் பிரயோகத்தில், அவனது தாத்தா, பாட்டி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்திய 14 வயது மாணவனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
14 வயது சிறுவனும் உயிரிழப்பு
தெளிவான இலக்குகளுடனும், திட்டமிடலுடனுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற வேளையில் பாடசாலை மாணவர்கள் பலர் சுவரேறிப் பாய்ந்தும், தப்பியோடியும் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.
தாய்லாந்தில் நாட்டில் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், சட்டவிரோதத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தாய்லாந்து பாடசாலையொன்றில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இது என்றும் கூறப்படுகின்றது.