யாழில் வன்முறை கும்பல் மடக்கிபிடிப்பு - 13 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர், அரசடி பகுதியில் வன்முறை கும்பலொன்று ஒன்றுகூடி நிற்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் 13 பேரை மடக்கி பிடித்துள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
மன்னாரை சேர்ந்த ஒருவரும், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 06 பேரும் ஏனையவர்கள் அரசடி மற்றும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை பொலிஸாரை கண்டதும் தம்வசம் இருந்த கைக்கோடாரி ஒன்றினை அருகிலிருந்த நீர் நிலையில் வீசியதாகவும், வன்முறை கும்பலிடம் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களை வழங்க
முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




