கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 12 வயது சிறுவன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் அயலவர்களால் கூரிய ஆயுதத்தால் 12 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேலியைச் சீர் செய்வதற்காகச் சென்ற சிறுவன் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்குத் தகவல் வழங்கப்பட்டும் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும், நேற்று (13-05-2021) காலை 11 மணியளவிலேயே ஆரம்ப விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் அலட்சியமாக செயற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுகின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 12 வயதுடைய தர்சிகன் என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, தாக்கப்பட்ட சிறுவனுக்கு
நீதி பெற்றுத் தரவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.