தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..! திமுக - அதிமுக ஆட்சி அமைக்க முயன்றால் தவெகவின் 107 எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக அல்லது அதிமுக அரசு அமைக்க முயன்றால் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவி விலகுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, “மக்கள் அதிக ஆதரவு வழங்கிய கட்சி என்பதால் ஆட்சி அமைக்க முதலில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
ஆளுநரின் முடிவு
இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விஜயை சந்தித்தபோது, 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்காமல் அரசு அமைக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டமன்றத்தில் அரசு அமைக்க தேவையான பெரும்பான்மை ஆதரவு நிரூபிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மைக்கு மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும், இடதுசாரி கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக திட்டம்
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக இன்று முன்னதாக நடத்திய கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு "அவசர முடிவுகளை" எடுக்க அதிகாரம் அளிக்கிறது.

அந்தத் தீர்மானம் குறித்து திமுக கூறுகையில், "இன்னொரு தேர்தலைத் தவிர்ப்பதும், ஒரு நிலையான அரசை அமைப்பதும், மதவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் இருப்பதும் எங்களின் முதன்மை நோக்கம்" என்று தெரிவித்தது.
பெரும்பான்மை இல்லாததை "சிக்கலான நெருக்கடி" என்று குறிப்பிட்ட திமுக, தனது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மே 10 வரை சென்னையில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்
இருப்பினும், திமுகவின் வெளி ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளதாக, திமுகவின் உயர்மட்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. தவெகவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், தற்போது எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்றும் அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

திமுகவின் ஒரு தரப்பு, விஜய் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதலமைச்சர் M. G. ராமச்சந்திரன் போல நீண்டகால அரசியல் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், Communist Party of India மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், “தனிப்பெரும் கட்சியான தவெகவிற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கி, பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளன.