மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது! வியாழேந்திரன்
இஞ்சி, உழுந்து, பயறு, மஞ்சள் போன்ற உற்பத்தி பொருட்களையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான விவசாய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு சிறுபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டாக்டர். அமலஸ்ரீ சில்வா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்டத்தின் பிரதேச செயலளர்கள், விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இவ்வமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி ,உழுந்து, பயறு போன்ற சிறு பொருளாதார பயிர்ச் செய்கைக்கான தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்குதல், ஆடு வளர்ப்புத்திட்டம் மற்றும் சேதனைப் பசளை உற்பத்திக்கான உபகரணங்களை வழங்கள் போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தவிர இஞ்சி, உழுந்து, பயறு, மஞ்சள் போன்ற உற்பத்திப் பொருட்களையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான விவசாய உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.