போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதற்கமைவாக, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுமக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிலோகிராம் கேரள கஞ்சா, 208 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனையில் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 570 ரூபா பணம், இரண்டு தொலைபேசிகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.பீ.வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிராம் 980 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகெட் பட்டுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 06 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். ஜா - எல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பட்டபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 511 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஓட்டோவொன்றில் பயணித்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை, இரத்மலானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 25, 29 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.