யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம்! - பங்காளிக்கட்சிகள் இடையே குழப்பநிலை
யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் (Basil Rajapaksa) தமது அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து ஆராய எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் பங்காளிக்கட்சிகள் கூடித் தீர்மானிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுகதனவி மின்சார உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இடையே கடும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென இதற்கான காரணத்தையும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் யுகதனவி மின்சார நிலைய உடன்படிக்கை குறித்துக் கலந்துரையாடவும் தமது தரப்பு காரணிகளை முன்வைக்க வேண்டும் என ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்த போதிலும், இந்த விடயங்கள் குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடித் தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்காளிக்கட்சிகளிடத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பங்காளிக்கட்சிகள் இந்த பதிலை ஜனாதிபதியிடம் எதிர்பார்த்திருக்காத நிலையில் அடுத்த கட்டத்தில் என்ன செய்வது என்பது குறித்து பங்காளிக்கட்சிகள் இடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அடுத்ததாகத் என்ன செய்வது என்பது குறித்து ஆராயும் விதமாக எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் சகல பங்காளிக்கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில்,
அரசாங்கத்திற்குள் வாத பிரதிவாதங்கள், கருத்து முரண்பாடுகள், கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் வருவது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் அடையாளம் என்றே நான் கருதுகின்றேன்.
அவ்வாறே இந்த விவகாரத்திலும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து எம்மத்தியில் இணக்கப்பாடு இல்லை. இதற்கு முன்னரும் அரசாங்கத்தில் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையில் அதனை எதிர்த்து நாம் செயற்பட்டோம்.
இப்போதும் அவ்வாறே இடம்பெற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கம் தவறான தீர்மானம் எடுக்கும் வேளையில் அதனைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்தைச் சரியான திசையில் கொண்டு நகர்த்தும் கடமை அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் எமக்கு உண்டு.
ஆகவே தான் அரசாங்கத்தில் நாம் எதிர்க்கட்சிகள் என்ற கருத்தையும் ஏற்கனவே கூறியிருந்தேன். பங்காளிக்கட்சிகள் இந்த விடயங்கள் குறித்து மீண்டும் பேசுவோம்.
அதன் பின்னர் ஒரு தீர்மானம் எடுக்கப்படும். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் பேசுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார், அவர்களுடன் பேசுவதா இல்லையா என்பதை நாம் விரைவில் தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளார் .