சீன கப்பல் தொடர்பில் இலங்கையின் முடிவு - தமது அதிருப்தியை வெளியிட்ட இந்தியா
அடுத்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில், இந்தியா, இலங்கையிடம் தமது உத்தியோகபூர்வமாக அதிருப்தியை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
'யுவான் வாங் 5' ஐ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கையின் முடிவு குறித்து "உயர் மட்டத்தில்" அதிருப்தி எழுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் இந்த கப்பல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மறுப்பு
இந்தியாவால், அதிருப்தி தெரிவிக்கப்பட்ட போதிலும், கப்பல், நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க இலங்கை இதுவரை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருவதாக இலங்கை கூறுகிறது.
ஆனால் கப்பல் இருப்பது அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் சீனக் கப்பல், சீனாவில் உள்ள ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து ஜூலை 13 அன்று புறப்பட்டு தற்போது ஹம்பாந்தோட்டையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது இலங்கை |
இந்தியாவை உளவு பார்க்க இந்த கப்பல் பயன்படுத்தப்படலாம்
யுவான் வாங் 5, வகுப்புக் கப்பல்கள் செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் போது இந்தியாவை உளவு பார்க்க இந்த கப்பல் பயன்படுத்தப்படலாம் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
எனினும், தனது கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான உரிமையை சீனா கடந்த வாரம்
நியாயப்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.