காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக உயிரிழந்த இளைஞர்! கொலையென உறவினர்கள் சந்தேகம்
யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பிரதான வீதியில் விழுந்து உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் பிரதான வீதியில் இன்று விழுந்து கிடந்த இளம் குடும்பத்தலைவரொருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும்,அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து உடனடியாக கொலையாளிகளை கைது செய்யுமாறும் தெரிவித்து உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன்,சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.