பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவர்
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே 13 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள்
பெல்மடுல்ல, கனேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான மதுபாஷினி என்பவரே உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு குழந்தையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், பெண் மருத்துவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது பணி நேரத்தை முடித்துவிட்டு இரத்தினபுரியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



