எங்கு அடக்கப்படுகின்றீர்களோ அங்கு தான் கிளர்ந்து எழ வேண்டும்! - வடக்கு ஆளுநர்
“பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனால் அரசியல் ரீதியாக சில கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது” என வடமாகாண ஆளுநர் பி.எஸ.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பல அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். ஒரு பெண் அரச நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய போது பெண்களினுடைய உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
அவற்றுக்காக நான்குரல் எழுப்பி பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. நான் அரசாங்க அதிபராக இருந்த போது அந்த விடயங்கள் இடம்பெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
நிர்வாக சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து அதிகாரிகளும் எந்த இடத்திலும், எந்தப் பகுதியிலும் கடமையாற்ற வேண்டும். ஆனாலும் சில அரசாங்க அதிபர்கள் இந்த பதவி பெண்ணால் வகிக்க முடியுமா என்று கேட்ட சந்தர்ப்பங்களை நான் இன்னும் மறக்கவில்லை.
அவை தான் எனக்கு சவால்களாக மாறி சாதனைகளாக மாறியது என்பது தான் உண்மை. அந்த அரசாங்க அதிபர்களும், நானும் ஒரே மாநாட்டில் கலந்து கொண்ட போது நான் பேசியதைப் பார்த்து திகைத்து போய் நின்ற சம்பவங்களும் உண்டு.
எங்கு அடக்கப்படுகின்றீர்களோ, எங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எங்கு நீங்கள் தடுக்கப்படுகின்றீர்களோ அங்கு தான் நீங்கள் கிளர்ந்து எழ வேண்டும். அங்கு தான் உங்களுக்கு சாதனைகள் இருக்கும். கடமைகளை சரியாக செய்கின்ற போது பதவிகள் தானாகவே தேடி வரும். பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் மிகக்குறைவாக காணப்படுகின்றது.
இதனால் அரசியல் ரீதியாக சில கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது. காணி உரிமைச் சட்டத்தில் மூன்றாம் அட்டவணையில் பெண்களுக்கு காணி உரிமை மாற்றுவது மறுக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது குடும்பத்தில் மூத்த ஆண் மகனுக்கு தான் காணி உரிமை மாற்றப்படுகின்றது. இந்த சட்டம் திருத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது. திருமண அத்தாட்சிப் பத்திரமான பதிவுத் பத்திரத்தில் பெண்களினுடைய தொழிலை பதிவதற்கான இடம் வழங்கப்படவில்லை.
காலனித்துவ ஆட்சியில் பெண்கள் உத்தியோகம் பார்க்கவில்லை. அதனால் அன்று வடிவமைக்கப்பட்ட படிவங்களில் அவை காணப்படவில்லை. அப்படிவங்களே சுமார் 70 வருடங்களாக நாம் பின்பற்றி வருகின்ற நிலமை காணப்படுகின்றது.
குடும்ப வன்முறை சம்மந்தமான சட்டவாக்கம் இருக்கின்ற போதிலும் பெண்கள் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் செல்கின்ற போது அவர்கள் கையாளப்படுகின்ற முறைகளினால் பெண்கள் நீதிமன்றங்களையும், பொலிஸ் நிலையங்களையும் தவிர்த்துக் கொள்ளும் நிலமை காணப்படுகின்றது.
பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் போது தான் சட்டவாக்கம் ஊடாகவும், கொள்கை வகுப்பின் ஊடாகவும் பெண்களைப் பாதுகாக்கும் ஒரு நிலமை இந்த நாட்டில் ஏற்படும். வடமாகாணத்தில் மகளிர் விவகாரம் என்பது எமது மாகாண அதிகார பரம்பலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரம், அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் கொள்கை வகுப்பில் ஈடுபட்டுள்ளோம். அந்த கொள்கை வகுப்பின் மூலம் வடமாகாணத்தில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் நாங்கள் விரைவிலே இனங்காண்டு அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களுக்கு உதவி செய்வோம். வடமாகாணம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் நாம் பேசியுள்ளோம்.
பல விடயங்களை செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். எங்களுக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கி தந்து சில விசேட வேலைத்திட்டங்களை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றார்.

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
