தீப்பிடித்த கப்பலின் மாலுமி அனுப்பிய மின்னஞ்சல்களை இலங்கை முகவர் நிறுவனம் அழித்துள்ளதாக தகவல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்து கடலுக்குள் மூழ்கி கொண்டிருக்கும் எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி, அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கை முகவர் நிறுவனத்திற்கு அனுப்பிய சில மின்னஞ்சல்களை அந்த நிறுவனம் அழித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கப்பலில் தீ ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் இருந்து நைற்ரிக் அமிலம் கசிந்துள்ளதாக மாலுமி உட்பட கப்பல் ஊழியர்கள் தெரியப்படுத்தி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கப்பலின் மாலுமி இது குறித்து தெரியப்படுத்திய மின்னஞ்சல்களை இலங்கை முகவர் நிறுவனம் அழித்துள்ளது என்பது இதுவரை பெற்றுக் கொண்ட வாக்குமூலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைமை இப்படி இருக்கும் போது, கப்பல் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதில் ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்பதால், கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனவும் மாதவ தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மே 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்த அந்த நிறுவனம் 20ஆம் திகதி காலையில் கப்பலில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக மீண்டும் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்துள்ளது.
உண்மையை மறைத்து ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட தகவல்களை வழங்கி, அந்த கப்பல் நிறுவனத்தின் தேசிய முகவர் நிறுவனமான சீ.கோன்சோடியம் லங்கா தனியார் நிறுவனம் செயற்பட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் முகாமையாளரான அர்ஜூன ஹெட்டியராச்சி உட்பட 7 பேரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறும், அவர்களுக்கு அறிவிப்பாணை அனுப்புமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கப்பலின் மாலுமி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் மேல் நீதிமன்றத்திற்கே விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா, சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அறிவிப்பாணை விடுக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறியுள்ளார்.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த ஏனைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதவான், அந்த கப்பல் தற்போது இருக்கும் பிரதேசத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் விபத்து ஏற்பட்ட போது கப்பலின் மாலுமி மற்றும் இலங்கை முகவர் நிறுவனத்திற்கு இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து விசாரணை நடத்தி, அந்த மின்னஞ்சல்களின் தரவுகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்குமாறு நிறுவனத்தின் முகாமையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வி.டி.ஆர் இயந்திரத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை ஒன்றை பெற நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.