இலங்கை கடற்பரப்பில் பற்றியெரியும் கப்பல் - அபாய நிலைமை குறித்து எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கருகாமையில் தீப்பற்றியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் விழும் இரசாயனங்கள் மற்றும் பொருட்களும், தீயில் எரிந்த கொள்கலன்களும் கொழும்பு, வத்தளை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளன.
கப்பலின் உடைந்த பாகங்கள், மிதக்கும் கொள்கலன் பாகங்கள், எரிந்த பொருட்கள் எண்ணெய் மற்றும் சாம்பல் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் குப்பைகள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
இந்த நிலையில் குறித்த கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.
இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய கடலோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இது குறித்த எச்சரிக்கை ஒன்றையும் நேற்று அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இலங்கையின் கொழும்பு துறைமுகக் கடற்பரப்புக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி தீப்பற்றிக் கொண்ட சிங்கப்பூர் நாட்டுக் கொடியின் கீழ் பதிவாகியுள்ள எக்ஸ்பிறஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ எரிந்து வருகின்றது.
ஏற்கனவே கடந்த 22ஆம் திகதி கப்பலில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எவ்வாறெனினும், நேற்று அதிகாலை மீண்டும் அந்தக் கப்பலில் இரசாயன கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டதில் தீ பரவியது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கை கடற்படை, விமானப்படை என பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கப்பலுக்கு அருகில் செல்வதற்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் தீயை இன்றைய தினத்திற்குள் கட்டுப்படுத்துவது மிகவும் சவால்மிக்கதாக இருக்குமென கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள நான்கு படகுகள், இன்றைய தினம் கப்பலுக்கு அருகே சென்று தீயைக் கட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கடல் நீரில் எண்ணெய் கலந்திருப்பதை உறுதிப்படுத்திய கடற்படைப் பேச்சாளர், இது மிகவும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நேற்று வரை எக்ஸ்பிறஸ் பேர்ல் கப்பலில் இருந்து 08 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.