தவறாக கைது செய்யப்பட்ட பெண்! பல வருடங்களின் பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
ஹசலக பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, தவறாக கைது செய்ததன் ஊடாக பெண் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, முன்னாள் பொறுப்பதிகாரி தனது தனிப்பட்ட நிதி மூலம் குறித்த பெண்ணுக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிப்படை உரிமைகள்
கப்பலின் சுக்கானம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குறித்த பெண், தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாகக்கூறி கைது செய்யப்பட்டார்.
கொலொங்கொடையைச் சேர்ந்த 47 வயதான அப்துல் ரஹீம் மசாஹீனா என்ற பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
மசாஹீனாவின் உடையில் உள்ள சின்னம் எந்த மதத்துடன் தொடர்பில்லாத போதிலும், அவர் 2019 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முதல் ஜூன் 3ஆம் திகதி விளக்கமறியில் வைக்கப்பட்டார்.
தவறாக கைது
எனினும், மத உணர்வுகளை அவமதிக்கும் அல்லது தூண்டும் நோக்கம் தனக்கு இல்லை என்று குறித்த பெண் தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தாம் தவறாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீதியை பெற்றுத்தருமாறு குறித்த பெண்ணினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் ஒப்புதலுடன் நீதியரசர் யசந்த கோத்தாகொட வழங்கிய தீர்ப்பின் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.



