மிக மோசமாக நடத்தப்பட்ட நோயாளி! ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சம்பவம்
மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி மிக மோசமான முறையில் நடாத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை அன்று மயங்கி விழுந்த 63 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் சரியாக மதியம் 12 மணிக்கு ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நோயாளிக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டு கோவிட் தொற்று இல்லை என முடிவு வந்ததன் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சேலைன் வழங்கப்பட்டது.
நேயாளிக்கு அந்த நேரத்தில் சிறுநீர், மலம் தானாக வெளியேறிய நிலையில் நோயாளியின் உறவினர்கள் துப்பரவு செய்ய பல தடவைகள் முயற்சி செய்தும் நோயாளி மயக்கமாக இருந்த காரணத்தால் முடியாமல் போயுள்ளது.
நோயாளியை துப்பரவு செய்து அவரை நோயாளர் விடுதிக்கு அனுப்புவதற்கு வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் யாரும் முன்வராத நிலையில் நோயாளியை கட்டிலுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அநாதரவாக விட்டிருக்கின்றனர்.
முற்பகல் 12 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நோயாளி அப்படியே குறித்த பகுதியில் கைவிட்ட நிலையில் இருந்துள்ளார்.
அதன் பின்னர் நோயாளியின் வீட்டில் இருந்து சென்ற நான்கு உறவினர்கள் நோயாளியை வேறு கட்டிலுக்கு மாற்றி நோயாளியை துப்பரவு செய்து கழுவி நோயாளர் விடுதியில் ஒப்படைத்துள்ளனர்.
சுமார் 7 மணித்தியாலங்கள் குறித்த பெண் நோயாளியை அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே யாரும் கவனிப்பாரற்ற நிலையில் வைத்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நோயாளி ஒரு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு எந்த வித சிகிச்சையும் வழங்காது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்போவதாக வைத்தியசாலையினால் தெரிவிக்கப்பட்டு அவரை அம்புயுலன்சில் ஏற்றுவதற்கு நான்கு ஆண்களை கூட்டிவருமாறு அங்குள்ள தாதியர்கள் கூறியுள்ளனர்.
அந்த நேரத்தில் நோயாளியின் இரண்டு உறவினர்கள் குறித்த நோயாளியை அம்பியுலன்ஸில் ஏற்றுவதற்கு தாதியர்கள் ஒத்துழைப்பு வழங்க வில்லையெனவும், நோயாளியான தனது தாயை மகள் மிகவும் கஸ்டப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றிய போது ஏனைய தாதியர்கள் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அம்பியுலன்ஸில் நோயாளியை ஏற்றிய பின்னர் நோயாளியை இறக்குவதற்கு இரண்டு ஆண்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு அம்பியுலன்ஸில் பயணித்த தாதியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏறாவூரில் இருந்து இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு போவதற்குள் அம்பியுலன்ஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று விட்டது.
நோயாளியை இறக்குவதற்கு ஆட்களை கூட்டி வரவில்லை என்று நோயாளியின் மகளுக்கு ஏறாவூரில் இருந்து அம்பியுலன்ஸ்சில் வந்த தாதிய பெண் மிக மோசமான முறையில் ஏசியுள்ளார்.
ஏற்கனவே ஒரு நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்களது உறவினர்கள் நான்கு பேர் கூட செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே ஏறாவூர் வைத்தியசாலை நிர்வாகம் கூறியிருந்தால் அந்த நோயாளியின் உறவினர்கள் முன் கூட்டியே நான்கு உறவினர்களை கூட்டிச் சென்றிருப்பார்கள்.
அத்துடன் வைத்தியசாலையில் இருக்கும் நோயாளி மலம், சிறுநீர் கழித்தால் அதனை உறவினர்கள் நான்கு பேர் சென்றுதான் துப்பரவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் 7 மணித்தியாலங்கள் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சை இன்றி கிடந்திருக்க தேவையில்லை.
இலங்கையில் மருத்துவத் துறையில் உள்ள மிக மோசமான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.
மனிதாபிமான சேவை நோக்கத்துடன் செயற்பட வேண்டிய வைத்தியசாலைகளை நம்பி எப்படி சாதாரண மக்கள் மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
சம்பள உயர்வு மற்றும் ஏனைய சலுகைகளை கோரி போராடும் சுகாதார துறை ஊழியர்கள் தங்களது கடமைகளை சரியாக செய்கின்றார்களா என்பதை கவனிக்கவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
