இலங்கையின் அபிவிருத்தி கொள்கை தொடர்பில் நேரில் பாராட்டு தெரிவித்த உலக வங்கிப் பிரதிநிதிகள் (Photos)
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (06.04.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே உலக வங்கி பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி
நாடாளுமன்ற வரவு - செலவு திட்ட அலுவலகத்தை நிறுவுதல், அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை, சமூகப் பதிவு போன்ற இலங்கையின் அபிவிருத்தி கொள்கைக்கான செயற்பாட்டுத் திட்டத்தை முழுமையாக்குவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கு அவசியமான கால எல்லை என்பன தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
உலக வங்கி
இதன்போது இலங்கையின் அபிவிருத்தி கொள்கை முன்னெடுப்புக்களுக்கு உலக வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்குப் பாராட்டுத் தெரிவித்த சாகல ரத்நாயக்க இந்த வேலைத்திட்டத்தை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
உலக வங்கியின் இந்த நாட்டுக்கான முகாமையாளர் சியோ கன்தா உள்ளிட்ட உலக வங்கி
பிரிதிநிதிகளும், பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்
கலாநிதி ஆர் .எச் .எஸ். சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சில்
கலந்துகொண்டனர்.




