திருகோணமலையில் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் செயலமர்வு
மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களில் தொகை மதிப்பு நடவடிக்கையினை வழிகாட்டும் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர்களான தொகை மதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
கணக்கெடுக்கும் கட்டத்தின் பயிற்சிகள் மற்றும் கள நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கு முன் மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களில் தொகை மதிப்பு நடவடிக்கையினை வழிகாட்டும் முகமாக தெளிவூட்டல் நிகழ்வானது இன்று (16) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வெளிக்கள முகாமைத்துவ பிரிவு
புள்ளி விபரத்திணைக்களத்தின் வெளிக்கள முகாமைத்துவ பிரிவு மற்றும் மாதிரி அளவீட்டுப்பிரிவின் பணிப்பாளரினால் மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினை பாராட்டி நினைவு சின்னம் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அறிமுகம், தொகைமதிப்பின் கட்டங்கள், தொகைமதிப்பின் ஒழுங்கமைப்புக் கட்டமைப்புக்கள், கணக்கெடுத்தல், தொகைமதிப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள், தொகைமதிப்பு உத்தியோகத்தர்களின் வகிபாகங்கள், கால அட்டவணை போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டது.
இதன்போது மாவட்ட பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.விஜயதாசன், புள்ளி விபரத்திணைக்களத்தின் வெளிக்கள முகாமைத்துவ பிரிவு மற்றும் மாதிரி அளவீட்டுப்பிரிவின் பணிப்பாளர் எஸ்.எச். மன்சூர், புள்ளி விவரத்திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பியலால் அரச குலரத்ன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் உட்பட புள்ளி விபரத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |