கிளிநொச்சியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு தொடர்பான பயிற்சி பட்டறை
கிளிநொச்சியில் (Kilinochchi) பால் நிலைச் சமத்துவம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று இடம்பெற்றுள்ளது.
'Healthy Lanka' நிறுவனம் வடக்கு மாகாணத்தில் சமூக மட்டங்களில் இணைந்து செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் 50 பேருக்கு இருநாள் முழு நேர பயிற்சி நெறியினை நேற்று (25.07.2024) ஆரம்பித்தது.
குறித்த பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி நிலையத்தில், அரச சார்பாற்ற நிறுவனங்களின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் என்.திருமாறன் தலைமையில் நடைபெற்றது.
நோக்கம்
முதல் நாள் செயலமர்வில் போதைப் பொருள் பாவனையினை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. கிராமிய மட்ட மற்றும் சிவில் சமூக, அரச சார்பற்ற நிறுவனங்களை போதைப் பொருள் தடுப்பு செயற்றிட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதன்போது, கிராமங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு சமூகத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மேலும், சமூக மட்டங்களில் உள்ள அமைப்புக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை இதற்காக மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அணுகுமுறைகள்
இரண்டாம் நாள் செயலமர்வில் போதைப் பொருள் பாவனையினையினை குறைத்தல் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை விட ஆண், பெண் சமத்துவ முறைகளை கையாளும் அணுகுமுறைகள் தொடர்பிலான விளக்கங்களும் இதன் போது உள்வாங்கப்பட்டன.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் 'Healthy Lanka' நிறுவனத்தின் முகாமையாளர் சாமிக்க ஜெயசிங்க, வடக்கு கிழக்கு இணைப்பாளர் தே.பிறேம்ராஜ், தலைமைக் காரியாலய அலுவலர்களான ஜனனி மற்றும் சரணி, மொழிபெயர்ப்பாளர் ஜெல்சியா மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |