சொந்த மண்ணில் உழைப்பது எம்மை நிலைத்து வாழவைக்கும்: சிறீதரன்(Photos)
எங்களுடைய சொந்த நிலத்தில் உழைத்து முன்னேறுவது தான் இந்த மண்ணிலே நிலைத்து வாழக்கூடியவர்களாக மாற்றியமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி உழவனுர் பகுதியில் சிறுகைத் தொழிலகமும் மாதிரிப் பண்ணையும் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியில் புதிதாக மாதிரி பண்ணையும், சிறுகைத்தொழிற்சாலையுமானது நிர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள் மற்றும் தோட்டங்கள் செய்யக்கூடியதாகவும், அப்பளம் உள்ளிட்ட சிறு கைத்தொழில் செய்யக்கூடிய இடமாகவும் மாற்றியமைத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறுகிய இலாபம்
இந்த மாதிரி பண்ணையை எல்லோருக்கும் உரித்தான சொத்தாக பாதுகாக்க வேண்டும். இன்று நாங்கள் வாங்கும் பொருட்களின் உற்பத்தி செலவு, அதனை சந்தைப்படுத்தல் இதனையடுத்து வரக்கூடிய இலாபம் மிகக் குறுகியதாக இருக்கின்றது.
ஏனெனில் இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைமை அவ்வாறானது. இந்த நிலையில் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறக்கூடிய வகையில் எங்களுடைய செயல் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் இருக்கின்ற அல்லது அரசாங்கத்திடம் நல்ல திட்டமிருக்கின்றது. அதனை செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இப்பொழுது இல்லை. நாங்கள் அதை கைவிட வேண்டும்.
எங்களுடைய சொந்த நிலத்தில் நாங்கள் எவ்வாறு உழைத்து முன்னேறுவது என்றும், கிடைக்கின்ற சிறிய உதவிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்ற திட்டங்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழில் இடம்பெற்ற நிகழ்வில் இளைஞர்களை கோதுகளாக மாற்றும் மிகப்பெரும் வேலைத்திட்டம் முன்னெடுத்து வருவதாக சிறீதரன் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







