மட்டக்களப்பில் பெண்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்: 1800 கையெழுத்துகளுடன் ஜனாதிபதிக்கு மனு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்த சமூகமாக, உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் யுத்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்ட கோரிக்கை
இலங்கையில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழு உடனடியாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகத்தினர், பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா வரையிலான கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மனு கையளிப்பு
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில் 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழு இதுவரை முழுமையாக இயங்காத நிலையில் இருப்பதால், அதனைச் சிறப்பாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆணைக்குழு செயல்படுவதற்கான முன்னுரிமை நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக 1800-க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்ட மனுவும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்டில் யுத்தத்தின் வலியும் வேதனையும் அனுபவித்த மக்களாகிய நாங்கள், உலகளவில் உருவாகி வரும் யுத்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீதியும் சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

