திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில் கைதான ஒன்பது பெண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு குழுவினர் நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து சென்றுள்ளனர்.
சங்கிலிகளைப் பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை நோட்டமிட்டுள்ளனர்.
அதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய வளாகத்தில் நடமாடிய சில பெண்களை விசாரித்த வேளை அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து கொண்டுள்ளனர்.
அதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், 09 பெண்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களை ஆலயத்தில் மறித்து வைத்தவாறே சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் , 09 பெண்களையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
அதன் போது அவர்கள் தங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளனர்.
அவர்களைப் பரிசோதனை செய்த வேளை அவர்களில் ஒருவரின் உடைமையிலிருந்து சங்கிலி ஒன்று மீட்கப்பட்டது.
அதேவேளை குறித்த கும்பலை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கரவண்டி இரண்டினை அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் முச்சக்கரவண்டி சாரதிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அத்துடன் குறித்த பெண்களுடன் சில ஆண்களும் ஆலயத்திற்கு வந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
09 பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்றுமுன்தினம் அவர்களை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
