வீட்டின் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயம்
வெளிமடை - டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரமொன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெளிமடை டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று குறித்த தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த பெண்ணொருவர் காயங்களுடன் வெளிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த குடியிருப்பில் முறிந்து விழுந்த மரம் தொடர்பில் பல மாத காலமாக தோட்ட நிர்வாகத்திடம் குடியிருப்புக்கு அபாயம் காணப்படுவதாக தெரிவித்து வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.