காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி.. யாழில் சம்பவம்
சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்தது. எனவே, காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 5ஆம் திகதி காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட்ட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக 17ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி நேற்று (24.11.2025) இரவு கைதுசெய்யப்பட்டுளார்.
பொலிஸார் அறிவுறுத்தல்
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாலிக்கொடியினை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதாகவும் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில் 27 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் வேறு சில சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள், குறிப்பாக இளைஞர் யுவதிகள் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
