உலகில் 2 நிமிடங்களுக்கு ஒரு பெண் மரணம் - வெளியான அதிர்ச்சி தகவல்
உலகில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பெண் கர்ப்பக்காலத்தில் அல்லது பிரசவத்தில் உயிரிழப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை பிரசவம் குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கையின் முடிவுகளின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது 2.87 இலட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வெளியான காரணம்
மகப்பேறு தொடர்பான நோய்கள், அதீத இரத்தப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், கருத்தடை பிரச்சினைகள் போன்ற காரணத்தினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தான், காங்கோ, சிரியா போன்ற மனித உரிமை மீறல்கள் அதிகமுள்ள நாடுகளிலும் ஏழ்மையான நாடுகளிலும் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், கர்ப்ப காலத்தில், பிரவசத்தில் சிக்கல் ஏற்படும் போது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளது.



