இலங்கையில் கழுத்தறுத்து பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு - மற்றுமொரு கொடூர சம்பவம்
நாவலப்பிட்டி - இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் முறையற்ற காதலன் கம்பளையில் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரின் வாக்குமூலம்
குறித்த பெண்ணை கூர்மையான ஆயுதத்தால் காயப்படுத்தி அந்த இடத்திற்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயிரிழந்த பெண் நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில் அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ள நிலையில், அங்கு வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




