திக்கம் வடிசாலை பனை உற்பத்தியாளர்கள் போராட்டம்: ஆதரவளிக்கும் பொ.ஐங்கரநேசன்
யாழ்ப்பாணத்தில் - திக்கம் வடிசாலை தொழிற்சாலையினை நிர்வகித்து வரும் உற்பத்தித் தொழிலாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திக்கம் வடிசாலையின் உரிமத்தை தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்து வரும் வடமராட்சி பனைசார் உற்பத்தி தொழிலாளர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், இப்போது இவர்களை புறந்தள்ளி, இவர்களுக்கே தெரியாமல் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ , திக்கம் வடிசாலையை தென்னிலங்கையை சேர்ந்த வி.ஏ.டிஸ்ரிலறிஸ் என்ற நிறுவனத்துக்கு 25 வருட குத்தகைக்குத் தாரை வார்த்துள்ளார்.
பேரினவாத எதேச்சதிகார போக்குடன் வடமராட்சி பனை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை தட்டிப்பறித்து தனது இனத்தவர்களிடம் கையளித்துள்ளார். என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திக்கம் வடிசாலை தொடர்பாக இன்று (25) பொ.ஐங்கரநேசன் யாழ். தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், ”பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. இதிலிருந்து பொருளாதார ரீதியாக அதியுச்ச பயனை அறுவடை செய்யவேண்டும் என்ற நோக்குடனே பனை அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது.
குற்றப்பின்னணி
திக்கம் தொழிற்சாலை தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் பனை பற்றிய பட்டறிவையோ, படிப்பறிவையோ கொண்டிராமல் அரசியற் சிபாரிசை மட்டுமே தகுதியாகக் கொண்டிருந்தார்கள்.
ஆளுங்கட்சியில் அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளில் இருந்து தேர்தலில் தோற்று போனவர்களுக்கு பிரதியுபகாரமாக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களால் பனை தொழில் சீரழிந்து இறங்கு முகம் கண்டிருப்பதோடு கிரிசாந்த பத்திராஜவும் இதனையே செய்து கொண்டிருக்கிறார்.
திக்கம் வடிசாலை 1983 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் நிதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
[QZYN79 ]
சுயாதீனமான இலாபத்தோடு இயங்கி வந்த இந்த வடிசாலை 1987இல் வடமராட்சியில் இடம்பெற்ற ஒப்பறேசன் லிபறேசன் இராணுவ தாக்குதல் காரணமாக பலத்த சேதமடைந்துள்ளது.
இதனால் பனை அபிவிருத்தி சபையிடம் இருந்து உதவி பெற நேரிட்டது. ஆனால் ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதையாகப் பனைத் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2001ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் மூலம் திக்கம் வடிசாலை பனை அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
திக்கம் வடிசாலையின் சுயாதீனம் பறிபோனது. பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்கள் அரசியல் நியமனம் என்பதால் அவர்களின் கீழ் இருந்து வந்த திக்கம் வடிசாலையின் வளங்களும் அரசியற் தேவைகளுக்கே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே திக்கம் வடிசாலையை பனை அபிவிருத்திச் சபையிடமிருந்து விடுவிக்க வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.
பனை தமிழர்களின் தேசியவளம் என்பதால் இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினையும் ஆகும்.
ஒத்துழைப்பு
திக்கம் வடிசாலையை தென்னிலங்கை முதலாளிகளிடமிருந்து மீட்கவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜவின் பேரினவாத எதேச்சதிகாரத்தை கண்டித்தும் பனைசார் உற்பத்தித் தொழிலாளர்களின் பின்னால் தமிழர்களாக நாம் அனைவரும் அணி திரண்டு போராடுவோம் ”என அவர் தெரிவித்துள்ளார்.