2024ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் விமலா? ரணில் இணங்கியதாக ஊடகமொன்று தகவல்
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்படவுள்ள விரிவான அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு வழங்க, ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது 2014ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன சம்பந்தமாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட விதத்தில் அதாவது, இறுதி தருணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அரசாங்கத்தில் இருந்து விலகி வரும் வகையில் நடக்க வேண்டும் எனவும், விமல் வீரவங்ச உள்ளிட்ட அவரது அணியினர் அரசாங்கத்திற்குள் இருந்தவாறு தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் வீரவங்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச, மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்து பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்சவுக்கு பின்னர் ஜனாதிபதி பதவியையும் எதிர்பார்த்திருப்பவர் என்பது இரகசியமான விடயம் அல்ல என சிங்கள இணைத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் தற்போது இருக்கும் நிலைகை்கு அப்பால் செல்ல எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதால், சிங்கள தேசிய வாத பிக்குகள் உள்ளிட்ட தரப்பினர் மாற்று அணியை தேடி வருகின்றனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ள போவதில்லை என கடந்த 9 மாதங்களாக கூறி வந்த ரணில் விக்ரமசிங்க, திடீரென நாடாளுமன்றத்திற்கு வர தீர்மானித்திருப்பதை தற்செயலாக நடந்த விடயமாக கருத முடியாது.
எண்ணிப்பார்க்க முடியாத சில சம்பவங்கள் அரசியல் துறையில் நடக்கலாம் என கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் துறையில் பேசப்பட்டு வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்த பின்னர் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்ரமசிங்கவுடன் சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.