பாதுகாப்பு உறவுகள் துண்டிக்கப்படுமா?
இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இந்தக் கோரிக்கை கடந்த பல மாதங்களாகவே பிரித்தானிய அரசின் உயர்மட்டத்தை நோக்கி முன்வைக்கப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத்தினால், ஒரு இணைய வழி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து, பிரித்தானிய அரசு தமது இராணுவ ஆலோசகரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகின்ற விண்ணப்பம் அது. பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர்கள், தாம் வசிக்கின்ற பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருக்கு இந்த விண்ணப்பத்தை அனுப்பும் வகையில் அந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது என்பதை கடந்த மாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது உணர முடிந்தது.
அந்த விவாதத்தில் உரையாற்றிய 20 பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர், இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பு ஈடுபாடுகளை பிரித்தானியா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகரை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கை பிரித்தானிய அரசினால் கவனத்தில் கொள்ளப்படும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. அவ்வாறு கொழும்பில் இருந்து பிரித்தானியா தனது பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ளுமானால், இலங்கைக்கு அது பெரும் இழப்பாகவே இருக்கும். ஏனென்றால் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.
இலங்கைத் தீவு பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த நாடு. 1948ல் சுதந்திரம் பெற்ற பிறகும் 1971ல் குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரையில் பிரித்தானியாவின் முடியாட்சியை ஏற்றுக் கொண்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலகட்டத்தில், குறிப்பாக 1983ல் இருந்து இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகள் அளிப்பது, இராணுவ உதவிகளை வழங்குவது என்று, பிரித்தானியா பாதுகாப்பு ரீதியாக பெருமளவில் உதவிகளை வழங்கியிருக்கிறது. இப்போதும் அந்த உதவிகளும் ஒத்துழைப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்காலத்தில், முக்கியமான நாடுகள் தமது தூதரகங்களில், தமது இராணுவ அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கும் வழக்கம் உருவாகியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்புகள், பரஸ்பரம் உறவுகளுக்கும், தகவல்களை சேகரித்துக் கொள்வது, பரிமாறிக் கொள்வதற்கும் இந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் உதவுவார்கள். இவர்களுக்கு இராஜதந்திரிகளுக்கான அந்தஸ்தும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாடும் இவ்வாறான நியமனத்துக்கென சில அளவுகோல்களை வைத்திருக்கிறது. இந்தியா எப்போதும் கடற்படை அதிகாரியையே கொழும்பில் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்து வருகிறது. சில நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு நியமனங்களை வழங்கும். சில நாடுகள் 3 ஆண்டுகளுக்கு நியமனங்களை வழங்கும்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி நிரந்தரமான ஒன்றாக இருக்கும் போலத் தெரியவில்லை.
இறுதிப் போர் நடந்த காலத்தில் 2007ம் ஆண்டு பெப்ரவரி தொடக்கம் 2009 ஜூன் வரையான காலத்தில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் லெப்டினன்ட் கேணல் அன்ரனி காஷ். இவர் போரின் இறுதிக்கட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு பல தகவல் குறிப்புகளை அனுப்பியிருந்தார்.
அவ்வாறு அனுப்பப்பட்ட தகவல் குறிப்புகளில் சிலவற்றை, இலங்கை அரசுக்கு நெருக்கமான குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான பிரித்தானிய செனட் உறுப்பினர் நேஸ்பி பிரபு 2017ம் ஆண்டில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அந்த தகவல் குறிப்புகள் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டும் வகையிலும், இலங்கைப் படைகள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க கூடிய வகையிலும் அமைந்திருந்தன.
போரின் இழப்புகள் தொடர்பாக மிக குறைந்தளவு புள்ளிவிபரங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவை சுதந்திரமாக பகுப்பாய்வு செய்யப்படாத தகவல்கள் என்று பிரித்தானிய கூறியிருந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை முக்கியமான ஆதாரமாக முன்வைக்க முனைகிறது.
போர்க்காலத்தில் லெப்டினன்ட் கேணல் அன்ரனி காஷினால் அனுப்பப்பட்ட தகவல் குறிப்புகளை முழுமையாக தம்மிடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது. ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், பிரித்தானிய அரசிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவற்றை வழங்க முடியாது என்று பிரித்தானியா நிராகரித்து விட்டதாக அமைச்சர் ஒருவர் ஆங்கில நாளிதழிடம் கூறியிருக்கிறார். இலங்கையை நீண்டகால நண்பன் என்று வாக்குறுதி அளித்த பிரித்தானியா தங்களிடம் உள்ள தகவல்களை வழங்க மறுத்து விட்டதாக அவர் ஏமாற்றத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தகவல்களை ஜெனிவாவில் நடக்கவுள்ள விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி செய்வதாக தெரிகிறது.
ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தினால் உருவாக்கப்படவுள்ள சாட்சியங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் குழு அமைக்கப்படுவதை எதிர்க்கின்ற இலங்கை அரசாங்கம், அந்தக் குழுவுக்கு சில விடயங்களை சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது என்பதையே இது வெளிப்படுத்தியிருக்கிறது.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் அவுஸ்திரேலியாவினால் வீசா நிராகரிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, குற்றச்சாட்டுகளை நிராகரிக்க கிடைத்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்றும் கூறியிருக்கிறார்.
இவற்றை வைத்து நோக்கும் போது, ஜெனிவாவில் உருவாக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கு அதிகாரபூர்வமாக இல்லாவிடினும், மறைமுகமாகவேனும் இலங்கை அரசு சாட்சியங்களை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.
அதேவேளை, தமது பாதுகாப்பு ஆலோசகர் அனுப்பிய தகவல்களை வழங்க மறுத்துள்ளதன் மூலம், இலங்கை அரசின் தப்பிக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கத் தயாரில்லை என்ற சமிக்ஞையை பிரித்தானியா வெளிப்படுத்தியிருக்கிறது.
2009ல் லெப்டினன்ட் கேணல் அன்ரனி காஷ், கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்ட பின்னர், பத்து ஆண்டுகளாக கொழும்பில் தனது பாதுகாப்பு ஆலோசகரை பிரித்தானியா பணியில் அமர்த்தவில்லை.
2017ல் முன்னைய அரசாங்கம் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க இணங்கிய பின்னர் தான், கொழும்பில் பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகரை நியமித்திருந்தது.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளுடன், நெருங்கிய உறவைப் பேணுவது குறித்து பிரித்தானிய மனித உரிமை ஆர்வலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள 5 படை அதிகாரிகளுடன் பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பகிரங்க சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ளும் முடிவை பிரித்தானிய அரசு எடுத்தால் அது ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனென்றால் பிரித்தானியா இவ்வாறான முடிவை 2009 லேயே எடுத்திருந்தது. 2019ல் தான் கொழும்பில் கேணல் டேவிட் அஸ்மானை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளாய்வு செய்வது என்ற முடிவை பிரித்தானியா எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தெரிவுகள் அந்த நாட்டு அரசாங்கத்தின் முன்பாக இப்போது உள்ளன.
பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த பிரதான நாடு. முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
இந்தச் சூழலில் அடுத்து வரும் மாதங்களில் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ உறவுகள் விடயத்தில் பிரித்தானியா சில முடிவுகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். அது எத்தகையது என்பது தான் கேள்விக்குரியது.

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
