புதுக்குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதியிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குள் இரவு வேளையில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக பகுதி அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, காட்டு யானைகள் வேலிகளை உடைத்து சேதப்படுத்தியும், பயன் தரும் வாழை, கரும்பு, மற்றும், விவசாய தோட்டங்களை துவம்சம் செய்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாகரைப் பகுதியிலேயே இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்கள் இருந்து வருகின்றது.
யானைகள் அட்டகாசம்
இந்தநிலையில் அந்தக் காட்டுயானைகள் தற்போது மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதிக்கு உள்நுழைந்துள்ளதனால் அங்குள்ள மக்களும் அச்சத்தின் மத்தியில் தமது வாழ்வாதாரத்தை கழிக்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
நகரை அண்மித்துள்ள பகுதிகளுக்குள் இவ்வாறு காட்டுயானைகளின் வருகை தருவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இங்குள்ள மக்களின் வாழ்வாதாங்களும், முற்றாகப் பாதிக்கப்படும் நிலமை ஏற்படும் என மக்கள் போரிக்கை விடுக்கின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்து வருவதோடு, மக்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கோரிக்கை
கடந்த வெள்ளிக்கிழமை(12) இரவு திசைமாறி மண்டூர் பகுதியிலிருந்து வெல்லாவெளி ஊடாக புதுக்குடியிருப்பு பகுதிக்குள் இவ்வாறு நான்கு காட்டு யானைகளும் ஊடுருவியிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அப்பகுதிக்கு விரைந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், இளைஞர்களும், இணைந்து காட்டுயானைகளை மீண்டும் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து படுவாங்கரைப் பகுதிக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை முன்நெடுத்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுயானைகள் நகர்பகுதிகளுக்குள் ஊடுருவாமலிருக்க தக்க தீர்வினை முன்வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









