விளக்கமளித்தால் விஜேதாச ராஜபக்ஷ புரிந்துகொள்வார்! - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்
உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனையை விஜேதாச ராஜபக்ஷ புரிந்து கொள்ளவில்லை என நிதி, பண மூலதன சந்தைகள் மற்றும் நிறுவன மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், விளக்கமளிக்கப்பட்டால் அவருக்கும் அது புரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் சிலர் உத்தேச சட்டங்கள் குறித்து விமர்சித்தமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கப்ரால்,
தம்மிடம் விசாரித்திருந்தால் விஜயதாசவுக்கு விளக்கமளித்திருக்க முடியும் என்று தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவருக்கு உண்மையான நிலைமையை விளக்கினாரா என்று கேட்டதற்கு, ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று கப்ரால் தெரிவித்தார்.
இதேவேளை விஜயதாச ராஜபக்ஷ ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், ஊடகங்களுக்கு விஷயங்களை கூறுவதும் தவறானது, ஏனெனில் அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டுப் பொறுப்பை பராமரிக்க வேண்டும் என்று கப்ரால் கூறினார்.
கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் கொலனியாக மாறும் என்ற கூற்றை அமைச்சர் மறுத்தார்.