ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை? ஞானசார தேரர் விளக்கம்
தமிழர்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரிவினை காரணமாகவே, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்களை இணைத்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரர் அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த விடயம் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், தமிழர்கள் மூவரை செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு ஞானசார தேரர் விளக்கம் அளித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
"ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளுக்கு இன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது குறித்து பல சிக்கல் நிலை காணப்படுகின்றன. நான்கு முஸ்லிம் சமூகத்தினர் செயலணியில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள்.
எனினும், தமிழ் உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது. அதாவது கண்டியில் உள்ள ஒருவரை உறுப்பினராக நியமிக்க யாழ்ப்பாணத்தில் உள்ளவர் விரும்பவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சினை கிடையாது.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அரசியல் மற்றும் சமய பிரச்சினைகளை நன்கு அறிவோம். தமிழ் உறுப்பினர்கள் செயலணியில் இல்லை என போர்க்கொடி உயர்த்தும் அரசியல்வாதிகள், தமிழ் மொழிக்காகவும் இந்து மத பாதுகாப்பிற்காகவும் இதுவரையில் என்ன செய்துள்ளார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒரு காலகட்டத்தில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன. மதமாற்றத்திற்கு தடைசெய்யும் சட்டமூலம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோர் இவ்விடயத்தில் முன்னின்று செயற்பட்டார்கள். ஆனால் இதுவரை மதமாற்றம் தடைச்சட்டம் இயற்றப்படவில்லை.
அதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல்கட்சிகளும் முன்னெடுக்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விருப்பம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. பிரச்சினைகள் தீர்ந்தால் அரசியல் செய்ய ஆதாரம் கிடையாது.
உண்மையான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போது இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளோம்.
இதேவேளை, சிறுபான்மையினர் என்ற சொற்பதத்தை கூட பயன்படுத்துவதை விரும்பவில்லை. மாகாணம், இனம் , மதம் என்ற வேறுபாடுகள் தேசிய ஒருங்கிணைப்பிற்கு பிரதான தடையாக காணப்படுகிறது.
ஆகவே நாட்டு மக்களின் தனிப்பட்ட கொள்கைகளை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறார்கள். பல்வேறு சாதனைகளை புரிகிறார்கள். இருப்பினும் அவர்கள் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள், சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் என இன அடிப்படையில் வேறுப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் இலங்கையர் அமைப்பு (டயஸ்போரா) என ஒன்றிணைந்தால் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதற்கான அடித்தளத்தை ஒரே-நாடு, ஒரே சட்டம் செயலணி ஊடாக இடவுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.