விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசாங்கம் எதற்கு? - கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி
சமையல் எரிவாயு, சீமெந்து, பால் மா போன்ற அத்தியவசிய பொருட்களின் விலைகள் உயரும் போது, தம்மால் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறுவதற்கு அரசாங்கம் ஒன்று எதற்கு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
தந்திரிமலை வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்த பின்னர் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
''அரசாங்கத்தினால், நாட்டை கட்டியெழுப்ப முடியாது போயுள்ளது என்பதுடன் குறைந்தது பொருளாதாரத்தைக் கூட முகாமைத்துவம் செய்ய முடியாமல் போயுள்ளது என்பது நன்றாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டு, மக்களின் வாழ்க்கை பாதுகாக்கும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை என்றால், அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக பதவி விலகி, நாட்டை கட்டியெழுப்ப கூடிய அணியினரிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
மக்களின் அனைத்து வருமான வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. நாட்டின் போஷாக்கின்மை அதிகரித்துள்ளது. முழு நாட்டு மக்களும் மிகவும் மோசமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்'' எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.